உலகம்
வன்முறைகளை விசாரிக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கூடுதலான அதிகாரங்கள்!

வன்முறைகளை விசாரிக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு கூடுதலான அதிகாரங்கள்!
வெளிவிவகார அமைச்சர் விஜித; ஜெனிவாவில் அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிக்கும் வகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்குக் கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.
அந்தக் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றும்போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்ததாவது:
எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவுசெய்தனர்.
அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட நாடாளுமன்றமே மலையகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய நாடாளுமன்றமாகத் திகழ்கிறது.
தற்போது நாட்டின் பொருளாதாரம் உறுதியடைந்துள்ளதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச் செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கவுள்ளோம்.
அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் இழப்பீடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக் கூறத்தக்கதுமான ஆட்சிநிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம். அடுத்ததாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உறுதிபூண்டிருக்கிறது.
அதன்பிரகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப் பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும்.
அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய வகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அந்தக் கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக உருவாக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும்.
மேலும் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் அந்தக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் -என்றார்.