இலங்கை
இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை

இலங்கையில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்று உத்தரவாதம் இல்லை
சத்தாதிஸ்ஸ தேரர் பரப்புரை
நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, படைக்குறைப்புச் செய்யும் நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பெண்களே பெரும் பங்களிப்பு வழங்கினர். வீடு வீடாக சென்று அந்தக் கட்சியின் பெண்கள் பொய்யுரைத்தனர். எனவே, அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமது அணியிலுள்ள பெண்களுக்கு உள்ளது. மக்கள் மனம் அறிந்து சேவையாற்றுவதே சிறந்தது.
நுகேகொடையில் இருந்து கொழும்புவரை நபரொருவர் மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக பயணித்துள்ளார். மூன்று இடங்களில் எரிபொருளும் நிரப்பியுள்ளார். கடுகண்ணாவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாதுகாப்பு நிலைவரம் இவ்வாறுதான் உள்ளது.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது பாரதூரமான விடயமாகும்.
எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போது திர்மானிக்க முடியாது. கிழக்கில் அடிப்படைவாத குழுவொன்று இருப்பதாக புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது. எனவே, எந்த நேரத்தில் தாக்குதல் நடக்கும் எனக் கூறமுடியாது. ஆதலால், இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு லட்சம்வரை குறைப்பது ஆபத்தானது – என்றார்.