இலங்கை
வனங்கள் காத்தனர் புலிகள்!

வனங்கள் காத்தனர் புலிகள்!
தமிழர் தாயகத்தின் வனப்பகுதிகள் விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது:
வன்னிப்பெருநிலப்பரப்பு எப்போதும் காடுகளை அதிகமாகக்கொண்ட நிலப்புரப்பாகவே காணப்படுகின்றது. அங்குள்ள மக்களின் வாழ்வு தொன்று தொட்டு இயற்கையோடு இணைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் என்றும் இயற்கையோடு முரண்பட்டதில்லை. காடுகளை அழித்ததில்லை. 2009ஆம் ஆண்டுவரை வெட்டப்பட்ட மரக்குற்றிகளால் நிரப்பப்பட்ட கனகரக வாகனங்கள் எம் வீதியால் சென்றதை நாம் கண்டதில்லை.
மரம் அரிகின்ற இயந்திர வாள்களின் கொடூர ஓசையை நாம் கேட்டதில்லை. 2009ஆம் ஆண்டு வரை வனவளத்திணைக்களமும், வனஉயிரிகள் திணைக்களமும் எமது இடத்தில் இருக்கவில்லை. ஆனாலும் விடுதலைப்புலிகளின் வனவளப்பிரிவு இருந்தது. இயற்கையை நேசித்த வன்னியர்களின் வாழ்க்கைமுறை இருந்தது. இதனால் வனப்பகுதிகள் அழிக்கப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் வெட்டு மரங்களாகவும், விறகுத் தேவைகளுக்காகவும் பெருநகரங்களை நோக்கி ஏற்றிச்செல்லப்படவில்லை. காடுகள் மிகவும் கவனமாக காவல் செய்யப்பட்டன.
ஆனால் இன்று, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளன. இவ்வாறு மக்களின் காணித்திருட்டில் ஈடுபடும் திணைக்களங்ளில் ஒன்றான வனவளத் திணைக்களம் வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வனவளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை – என்றார்.