இலங்கை
பரீட்சை மண்டபத்துக்குள் வன்முறைக்குழு அடாவடி!

பரீட்சை மண்டபத்துக்குள் வன்முறைக்குழு அடாவடி!
மாணவர்கள் மீது கடும் தாக்குதல் கோரப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபத்துக்குள் வன்முறைக்குழுவொன்று அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையமானது இரண்டு பாடசாலைகளின் பரீட்சை நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது. அங்கு நேற்றுக் காலை 7:30 மணியளவில் இரு பாட சாலை மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியிருந்த நிலையில் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்த நிலையில், நண்பகல் 11:15 மணியளவில் வெளியில் இருந்து ஒரு தரப்பு பரீட்சை நிலைய வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனையடுத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரால் மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தொடர்ந்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரால், எழுத்து மூலமாக பரீட்சை நிறைவுபெறும் வரையான காலம்வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறுகோரி முறைப்பாடொன்று மருதங்கேணி பொலிஸாரிடம் வழங்கப்பட்டது. அதற்கமைய பரீட்சைகள் நிறைவடையும் வரையில் பொலிஸ் பாதுகாப்பை வழங்கவும் நடமாடும் பொலிஸ் கண்காணிப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.