உலகம்
பள்ளிவாசல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!

பள்ளிவாசல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் பள்ளிவாசல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மூன்று நாட்கள் துக்க தினத்தை அறிவித்துள்ளது.