இந்தியா
ஹரியானா துப்பாக்கிச் சூடு: 25 பேர் காயம்!

ஹரியானா துப்பாக்கிச் சூடு: 25 பேர் காயம்!
இந்தியாவின் ஹரியானாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்த சுவாமி ஹரி ஓம் தாஸ், ஹரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18 ஆம் திகதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இதில் 1,008 அர்ச்சகர்கள் பங்கேற்று யாகம் நடத்தினர். அவர்களுக்கு தரம் குறைந்த உணவு வகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின் பாதுகாவலர்களுக்கும் இடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. அப்போது சுமார் 70 அர்ச்சகர்களை, பாதுகாவலர்கள் அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அர்ச்சகர்கள் யாகம் நடைபெற்ற பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்தனர். லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களை, பொலிஸார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில் சுவாமி ஹரி ஓம் தாஸின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் 25 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.