இலங்கை
இராணுவத்தை திஸ்ஸ விகாரையிலிருந்து வெளியேற்றியவர்கள் யார்…

இராணுவத்தை திஸ்ஸ விகாரையிலிருந்து வெளியேற்றியவர்கள் யார்…
தமிழ் இனவாத வன்முறைக் கும்பலின் போராட்டத்தையடுத்து திஸ்ஸ விகாரையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? வடக்கு பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? என்று முன்னாள் அமைச்சர் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
காங்கேசன்துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புண்ணிய நிகழ்வொன்று நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரையைத் திறக்கும் நிகழ்வே அதுவாகும். 29 தேரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இராணுவத்தினர் நேற்றுமுன்தினம் முதல் இந்தப் புண்ணிய காரியத்தில் ஈடுபட்டனர். பாரம்பரிய நாட்டியக் கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். இப்படி ஏற்பாடுகள் எல்லாம் இடம்பெற்றிருக்கையில், நிகழ்வை நிறுத்துமாறு வலியுறுத்தி காலை 7 மணியளவில் தமிழ் இனவாத வன்முறைக் கும்பலொன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து இராணுவத்தினரை விகாரையில் இருந்து செல்லுமாறு மேல்மட்டத்திலிருந்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் வெளியேறினர். பெரஹெர மாத்திரமே இடம்பெற்றது. தேரர்களுக்கு உணவும் வழங்கமுடியாமல் போனது.
இந்த உத்தரவை வழங்கியது யார்? ஜனாதிபதியா?, பிரதி பாதுகாப்பு அமைச்சரா?, பாதுகாப்புச் செயலாளரா?, இராணுவத் தளபதியா? அல்லது பிரபாகரனின் அவதாரமா? என கேட்கின்றோம். பௌத்த நாட்டில் வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வொன்றை நடத்துவதற்கு வன்முறைக் கும்பல் இடமளிக்க மறுக்கின்றதெனில், நாட்டில் தேசியப் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது? இந்தக் குழுவுக்கு பயந்து நிகழ்வை நிறுத்தியது கோழைத்தனமாகும்’ – என்றார்.