நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 25/03/2025 | Edited on 25/03/2025

97வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணப்படம் பிரிவில் விருது வென்று உலகளவில் கவனம் ஈர்த்த படம் ‘நோ அதர் லேண்ட்’. இப்படம் பாலஸ்தீனிய சமூக ஆர்வலர் பேஸல் அட்ரா, இஸ்ரேலிய இராணுவத்தால் தான் வாழ்ந்த நிலம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த போராடுவதை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். இவரோடு ஹம்தான் பலால் மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகியோரும் இப்படத்தை இயக்கியிருந்தனர். இதில் இயக்குநர்கள் பேஸல் அட்ரா மற்றும் யுவால் ஆப்ரஹாம் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் இன அழிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இது பலரது கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர்களின் ஒருவரான ஹம்தான் பல்லால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக படத்தின் மற்றொரு இயக்குநரான யுவால் ஆப்ரஹாம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இயக்குநர் ஹம்தான் பல்லாலை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கினர். அதில் அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டபோது இஸ்ரேலிய வீரர்கள் ஹம்தானை தாக்கி, கைது செய்தனர்” எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு கண்டனங்களையும் எதிர்கொண்டது. 

Advertisement
ஹம்தான் பல்லால்

இதனைத் தொடர்ந்து தற்போது, யுவால் ஆப்ரஹாம், “இரவு முழுவதும் கைவிலங்கு போடப்பட்டு இராணுவ தளத்தில் தாக்கப்பட்ட பிறகு, ஹம்தான் பல்லால் இப்போது விடுதலையாகி, தனது குடும்பத்திற்கு வீடு திரும்ப உள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.