இலங்கை
சிங்களக் குடும்பங்களையும் வடக்கில் மீளக்குடியேற்றுக!

சிங்களக் குடும்பங்களையும் வடக்கில் மீளக்குடியேற்றுக!
வீரசேகர வலியுறுத்து
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்தன. அவர்களின் காணிகளுக்கு என்ன நடந்தது? எனவே, அவர்களை மீள்குடியமர்த்தி அவர்களுக்குரிய காணிகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது:
‘வடக்கில் விகாரை மற்றும் இராணுவத்திடம் நிறைய இடங்கள் உள்ளன. அவை மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று புத்தசாசன அமைச்சர் தெரிவித்துள்ளார். போருக்குப் பின்னர் பொறுப்பேற்ற காணிகளில் 95 சதவீதம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது காலத்தை வீணடிக்கும் செயலாகும்.
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களும் வாழ்ந்தன. அவர்களின் இடங்கள் எங்கே? தமிழ் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அறிவிப்புகளை புத்தசாசன அமைச்சர் வெளியிட்டால் பரவாயில்லை.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தி, அவர்களுக்குரிய இடங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு புத்தசாசன அமைச்சரிடம் கோருகிறோம் – என்றார்.