இலங்கை
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 2 திணைக்களங்கள் முட்டுக்கட்டை

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 2 திணைக்களங்கள் முட்டுக்கட்டை
வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்வருகின்ற போதிலும், இரண்டு திணைக்களங்கள் முட்டுக்கட்டை போட்டுவருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமாரவின் கோரிக்கைக்கு அமைய, வெளிநாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் சில வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்வந்துள்ளன. கடனாக இல்லாமல் நன்கொடையின் அடிப்படையிலேயே இந்த அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளன. ஆயினும், நிதியமைச்சின் கீழ் இயங்கும் இரண்டு திணைக்களங்கள் அந்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
வடக்கை மாத்திரம் ஏன் இந்தத் திட்டம் ? ஏனைய இடங்களுக்கு ஏன் வழங்கவில்லை? என்று கேள்விகளைக் கேட்பதோடு, அவற்றின் நடவடிக்கைகளுக்கும் இடையூறு செய்யும் வேலைகளில் அந்தத் திணைக்களங்கள் முனைப்புக் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற அடிப்படையில், ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நாட்டுக்குள் வரும் அபிவிருத்தித் திட்டங்களைக்கூட அரச திணைக்களங்கள் தடுத்து நிறுத்துகின்றமை பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.