இலங்கை
இ.போ.ச பேருந்து மீது தாக்குதல் ; அடவடித்தனம் செய்த இராணுவ சிப்பாய்

இ.போ.ச பேருந்து மீது தாக்குதல் ; அடவடித்தனம் செய்த இராணுவ சிப்பாய்
பதுளை – பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய 35 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பண்டாரவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துவிட்டு மீண்டும் பண்டாரவளை டிப்போவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.
இதன்போது, இனந்தெரியாத நபர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் குறித்த பஸ்ஸை வழிமறித்து, பஸ் சாரதியிடம் தன்னை கொழும்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
பின்னர் பஸ் சாரதியும் நடத்துனரும் ஏற்கனவே கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்துவிட்டதாகவும் தற்போது கடமைகளை முடித்துவிட்டு பண்டாரவளை டிப்போவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் இராணுவ சிப்பாயிடம் கூறியுள்ளனர்.
இதன்போது சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பஸ் சாரதியுடனும் நடத்துனருடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது சந்தேக நபரான இராணுவ சிப்பாய் குறித்த பஸ்ஸை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.