இந்தியா
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்கவும்!

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்கவும்!
தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை, விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் தீர்மானம், எந்த வாக்கெடுப்பும் இல்லாமல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை, இந்திய மத்திய அரசாங்கத்துக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் அனுப்பிவைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் மோடி, நாளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே, தமிழக சட்டப் பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இருந்து எதிர்வரும் ஆறாம் திகதி புறப்படும் பிரதமர் மோடி, புதுடெல்லிக்குச் செல்லாமல் நேரடியாகத் தமிழகத்துக்கே செல்கின்றார். அங்கும் மீனவர்களின் விவகாரம் உள்ளிட்ட பல்துறை விடயங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.