இலங்கை
அரசாங்கத்தின் முட்டாள்தனத்தால் பேரழிவை நோக்கி நகர்கின்றது நாடு!

அரசாங்கத்தின் முட்டாள்தனத்தால் பேரழிவை நோக்கி நகர்கின்றது நாடு!
சஜித் எச்சரிக்கை
ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் இல்லை. ஆதலால், நாடு பொருளாதாரப் பேரழிவை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.
புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போதைய அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பெரும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர். விண்ணை முட்டும் பொருள்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள 44 வீதமான வரிகள் நாட்டுக்குப் பெரும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
முறையான பொருளாதார வேலைத்திட்டம் இன்மையால் நாடு பொருளாதார அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி எரிபொருள் மற்றும் எண்ணெய் மானியங்கள் வழங்கப்படவில்லை. உர மானியமும் வழங்கப்படவில்லை. அரசாங்கம் இந்த வரிக்கொள்கை தொடர்பில் சரியான நிலைப்பாட்டில் இல்லை. அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாகப் பேசி வருகின்றது.
இவ்வாறேபோனால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் ஆபத்தில் விழும். இந்த பாரதூரமான பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் இருந்த வந்த ஒரே தீர்வு, குழுவொன்றை நியமிப்பது மட்டுமே. உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அது நடக்கவில்லை – என்றார்.