இந்தியா
“புதுச்சேரி அரசு, எதிர்க்கட்சியினர் இடையே மறைமுக ஆதரவு”: அ.தி.மு.க அன்பழகன் குற்றச்சாட்டு

“புதுச்சேரி அரசு, எதிர்க்கட்சியினர் இடையே மறைமுக ஆதரவு”: அ.தி.மு.க அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் அன்பழகன் உரையாற்றினார். அப்போது, “அ.தி.மு.க வெற்றிக்காக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது தான் கூட்டணியாக அமையும். தி.மு.க அரசை வீட்டிற்கு அனுப்பக் கூடிய மெகா கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அவரது ஆலோசனைப்படி, புதுச்சேரியிலும் வெற்றியை பெறுவோம்.புனித இடமாக கருதப்பட வேண்டிய சட்டமன்றத்தை, வெற்று அரசியல் செய்யும் இடமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வருகிறார். . தமிழகத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஆட்சியின் ஊழல், முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி முன்வைக்கிறார். ஆனால், அவரை பேசவிடாமல் தடுப்பது மற்றும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.மூன்று முறை தி.மு.க அரசைக் கவிழ்த்த காங்கிரஸுடன் அவர்கள் கூட்டணி வைத்துக் கொண்டு, யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அ.தி.மு.க-வினருக்கு அறிவுறுத்துகின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி அமைத்த போது கச்சத்தீவை மீட்போம் என பா.ஜ.க-விடம் ஏதாவது நிபந்தனை விதித்து கூட்டணியில் ஸ்டாலின் சேர்ந்தாரா? புதுச்சேரியில், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், பா.ஜ.க-விற்கும், முதலமைச்சருக்கும் ஆதரவாக உள்ளனர். புதுச்சேரி அரசும் தி.மு.க., காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுசரணையாக நடந்து வருகிறது. தேர்தல் நடைபெற சிறிது காலமே இருக்கும் சூழலில், அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே அனுசரணையான சூழ்நிலை தேவையற்றது. இது தேர்தலின் போது ஆளும் அரசின் கூட்டணிக்கு எதிர்வினையாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.