இலங்கை
உறவுகளைத் தொலைத்த வேதனை எனக்குப் புரியும்; ஜனாதிபதி உருக்கம்

உறவுகளைத் தொலைத்த வேதனை எனக்குப் புரியும்; ஜனாதிபதி உருக்கம்
படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் விசாரித்து, வெளிப்படுத்துவோம். அதைப் பொறுப்பான அரசாங்கமான நிறைவேற்றுவோம். ஏனெனில், உறவுகளைத் தொலைத்த வேதனை எனக்குப் புரியும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
காணாமற்போன பிள்ளைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தாய்மார்களின் வேதனை எனக்குத் தெரியும். ஒரு உறவு உயிரிழந்து விட்டால் நாங்கள் துன்பப்படுவோம். அழுவோம். காலப்போக்கில் அந்தக் காயம் ஆறிவிடும். ஆனால், ஓர் உறவு காணாமற்போனால், அந்த உறவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அனுதினமும் மனவுளைச்சலையும், துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த வேதனை கொடியது.
எனது சகோதர் ஒருவர் காணாமலாக்கப்பட்டவர்தான். ஆதலால், அந்த வலியைப் பட்டுணர்ந்தவன் என்ற ரீதியில் மிகவும் பொறுப்புடன் நான் இந்த விடங்களைக் கூறுகின்றேன். எனவே, காணாமலாக்கப்பட்டோரின் விடயத்தில் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நாங்கள் விசாரணைகளை நடத்துவோம் – என்றார்.