இலங்கை
தமிழர் பகுதியில் வாள் வெட்டு ; சினிமா பாணியில் தப்பிச் சென்ற சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட குழு

தமிழர் பகுதியில் வாள் வெட்டு ; சினிமா பாணியில் தப்பிச் சென்ற சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட குழு
வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் “கோபு ரீம்” என்ற வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் என்ற ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (15) இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள ஒருவர் மீது முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர்சைக்கிள்களில் அவரின் வீட்டை தேடிச் சென்று தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள வேறொரு வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தரை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன், தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.