பொழுதுபோக்கு
திடீர் மாரடைப்பு; காவல் பட இயக்குனர் நாகேந்திரன் மரணம்: திரையுலகினர் இரங்கல்

திடீர் மாரடைப்பு; காவல் பட இயக்குனர் நாகேந்திரன் மரணம்: திரையுலகினர் இரங்கல்
விமல், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாக காவல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்த நிகழ்வு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திரையுலகை பொருத்தவரை பிரபலங்களின் மரணம் திடீரென நிகழ்வது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில், நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி.பி ஆகியோரின் திடீர் மரணம் திரையுலகில், பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ள நிலையில், கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின், மரணம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சமீபத்தில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென மரணமடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கார்த்தி நடிப்பில் வெளியாக சகுனி படத்தின் இயக்குனர் தனது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது திடீரென மரணடைந்தார், இப்படி திரையுலக பிரபலங்கள் திடீரென மரணமடைவது திரைத்துறை வட்டாரத்தில், அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு இயக்குனர் மரணமடைந்துள்ளார். விமல், சமுத்திரக்கனி, புன்னகைப்பூ கீதா ஆகியோர் நடிப்பில் வெளியாக காவல் படத்தை இயக்கியவர் நாகேந்திரன்.எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, இமான் அன்னாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலில் தோல்வியை சந்தித்த நிலையில், நாகேந்திரன் அடுத்து மற்ற இயக்குனர்களின் படங்களில் பணியாற்ற தொடங்கினார். இதனிடையே திடீர் மாரடைப்பு காரணமாக நாகேந்திரன் மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவு செய்தி கேட்டது மிக துயரமான நாளை துவங்கி வைத்திருக்கிறது. நாட்களும் நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்து போராடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டு போய் விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு வேதனையானது. காலம் யாருக்கு என்ன செய்ய காத்திருக்கோ என்ற பயத்தை ஏற்படுத்தி செல்கிறது. சகோதரனாய் நெருங்கிய நண்பனாய் பயணித்தவரை இழந்து போனதால் நெஞ்சம் கலங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் நாகேந்திரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.