இலங்கை
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – நாளை வாக்களிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – நாளை வாக்களிப்பு
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தல் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆம்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது வாகன அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு என்பற்றை வாக்களிக்க வரும்போது எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வாக்காளர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம்.
வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், .அதற்கு எதிராக வெற்றுக்கட்டத்தில் புள்ளடி (X) இடவேண்டும்.
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். அவ்வாறு செய்தால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும். புள்ளடி (X) இடப்படாத வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும்.-என்றார்.