இலங்கை
வவுனியா இரட்டைக் கொலை – சந்தேகநபர்களுக்கு நீதிமன்று பிணை அனுமதி

வவுனியா இரட்டைக் கொலை – சந்தேகநபர்களுக்கு நீதிமன்று பிணை அனுமதி
வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைகள் தொடர்பில், நீண்ட நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த இரட்டைக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஆறு பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.
அதற்கு ஆட்சேபனை வெளியிட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தினர் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்களை முன்வைத்திருந்தனர். இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தால் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைவாகவே முதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது. சந்தேகநபர்கள் அனைவரும் மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிக்கு இடையிலான நேரத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தமது வரவை பதிவுசெய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.