இந்தியா
உரிமையாளர் போல் நடித்து ரூ. 5.10 கோடி கொள்ளை: கேரளாவில் முக்கிய குற்றவாளி கைது

உரிமையாளர் போல் நடித்து ரூ. 5.10 கோடி கொள்ளை: கேரளாவில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் கணக்காளரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட நபர், அந்நிறுவனத்தின் உரிமையாளர் போல் பேசி, தான் அரசு அதிகாரிகளை சந்தித்து இருப்பதாகவும், புதிய திட்டத்திற்காக தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கணக்காளர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 5 கோடியே 10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.இந்த மோசடி குறித்து புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 5.10 கோடியில் சுமார் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. அந்த கணக்கு முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த மொஃபிகுல் ஆலம் முலா என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டு, கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு வங்கி கணக்கில் ரூ. 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரத் என்பவருக்கு சொந்தமானது என போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வாளர் தியாகராஜன் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான தலைமை காவலர் மணிமொழி மற்றும் காவலர்கள் பாலாஜி, வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய சைபர் குற்றப்பிரிவு போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு திருவனந்தபுரம் பகுதியில் சரத்தை கைது செய்த போலீசார், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.