இலங்கை
ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி இல்லை!

ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி இல்லை!
இயந்திரத்தில் தொழில்நுட்பப் பழுது போட்டுடைத்தார் இளங்குமரன் எம்.பி.
ஆனையிறவு உப்பளம் இன்னும் இயங்கவில்லை. உப்பளத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து உபகரணங்களையும், தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளோம் – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஆனையிறவு உப்பளத்தில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர், உப்பளத்தின் நிர்வாகத்தினரை நேரில் சென்று சந்தித்த பின்னர் அவர் தெரிவித்ததாவது:
ஆனையிறவு உப்பளத்தில் உள்ள பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி பணியாளர்கள் போராடியிருந்தனர். அவர்களின் போராட்டம் தவறு என்று நான் கூறவில்லை. நீண்டகாலக் காத்திருப்பு, வலி, வேதனை இதெல்லாம் சேர்ந்துதான் அவர்கள் இவ்வாறு போராடியுள்ளனர். எனவே, அவர்களின் கோரிக்கைக்கு முழுமையான தீர்வை நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.
உண்மையில் ஆனையிறவு உப்பளம் இன்னமும் இயங்கு நிலையை அடையவில்லை. இயந்திரத்தின் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்வதற்காக உபகரணங்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இரு வாரங்களுக்குள் முழுமையான பணிகளை மேற்கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
உப்பளம் முழு வினைத்திறனுடன் செயற்படும்போது வருமானம் அதிகரிக்கும் அதன் பின்னர் இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை நாங்கள் உயர்த்துவோம் – என்றார்.