இலங்கை
விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு
நுவரெலியா கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக பிரதான வீதி மற்றும் நீர் ஆதாரங்களில் எரிபொருள் கலந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த பவுசரில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீற்றர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , பவுசர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கசிந்த நிலையில் பிரதேச மக்கள் அதை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
விபத்து நடந்த நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, அதிக அளவு எரிபொருள் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கும் பவுசர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கீழே உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் பகுதிகளுக்குள் கலந்துள்ளது.
கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள், விபத்துக்குள்ளான பவுசரில் மீதமிருந்த எரிபொருளை, பவுசர் வாகனங்களைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.