
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 17/05/2025 | Edited on 17/05/2025

விஜய் சேதுபதி நடிப்பில், 7சி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘ஏஸ்’. இப்படத்தில் ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, யோகி பாபு, பப்லு பிருத்வீராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.
இப்படம் வரும் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர். அந்த வகையில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். வர்ணம் படத்தில் அவர் தான் என்னை ரெக்கமெண்ட் செய்தார்.
இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி. என் அப்பா மரண படுக்கையில் இருக்கும்போது தன்னுடைய பிள்ளை உருப்படுமா என்று கேட்ட போது, நான் வர்ணம் படத்தின் போட்டோவை காண்பித்து, கவலைப்படாத, உன் புள்ளை நல்லா வந்துருவான், அவனுக்கு நடிக்க வருதுன்னு சொன்னேன்” என்றார்.