இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாகிச்சூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

கொட்டாஞ்சேனை துப்பாகிச்சூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,
கொட்டாஞ்சேனை , சுமித்திராராம மாவத்தை பகுதிக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீடொன்றில் இருந்த பெண் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய நபர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “புகுடு கண்ணா”வின் சகா என தெரியவந்துள்ளது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 70 வயதுடைய பெண் அவரது பெரியம்மா எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பபொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.