இலங்கை
தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும் ; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டு

தற்போதுள்ள கல்வி முறை படிப்படியாக மாற்றப்படும் ; பிரதமர் ஹரிணி சுட்டிக்காட்டு
தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘விஷன்’ நிகழ்ச்சித் தொடருடன் இணைந்ததாக போபே ராஜசிங்க கல்லூரி இந்த வாய்ப்பைப் பெற்றது.
இதற்கு பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்றும், செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.
போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எதிர்காலத் தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின்
வகிபாகம் குறித்து பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானி, பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.
மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடங்கியதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்தல், உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தல் என்பன இடம்பெற்றது.
பின்னர், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இலங்கை வங்கிக் கணக்குகளும் திறக்கப்பட்டன.