இலங்கை
கடந்தகாலத்தோல்விகளை மாற்றி பொறுப்புக்கூறலை நிலைநாட்டுக

கடந்தகாலத்தோல்விகளை மாற்றி பொறுப்புக்கூறலை நிலைநாட்டுக
வலியுறுத்துகின்றது சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் போர்க் குற்றங்களை மறுத்ததுடன், அவை தொடர்பில் நம்பத்தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளத் தவறின. தற்போதைய அரசாங்கமாவது கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைச் சீர் செய்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா? என சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
உள்நாட்டுப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகும் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடினர்.
வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான மிகமோசமான மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்னமும் நீதியையும், பொறுப்புக்கூறலையும் கோரிவருகின்றனர்.
இருப்பினும் அத்தகைய குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் மறுத்து வந்தன, நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தவறியிருக்கின்றன.
தற்போதைய புதிய அரசாங்கமேனும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளை சீர்செய்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா? பாதிக்கப்பட்ட தரப்பினரின் நீதிக்கான கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும்-என்றுள்ளது.