சினிமா
உலகமே பாராட்டும் “கூத்தாடி” படம்..!–ATFIA 2025 விருது வென்ற இலங்கைத் தமிழரின் சாதனை..!

உலகமே பாராட்டும் “கூத்தாடி” படம்..!–ATFIA 2025 விருது வென்ற இலங்கைத் தமிழரின் சாதனை..!
மரபு என்பது காலத்திற்கு ஏற்ப மாறும் சிந்தனை அல்ல. அது பழமைக்கு உயிர் புகுத்தும் சாகசம். அதனை மிக நவீனமான யுகத்தில், சிறந்த கலை வடிவமாக கொண்டு வந்திருக்கிறது ஆஸ்திரேலியாவில் உருவான “கூத்தாடி” என்ற தமிழ் திரைப்படம்.சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ATFIA 2025 (Australia Talent and Film International Award) விருது விழாவில், இந்த திரைப்படம் சார்பாக அதன் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதை வென்றது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.”கூத்தாடி” திரைப்படம் தமிழ் மக்களின் பாரம்பரிய கலையாக விளங்கும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை, அவற்றின் மரபைக் காப்பாற்றும் முயற்சியை, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தாக்கத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் பிரதிபலிக்கின்றது.இது ஒரு பொழுதுபோக்கு படம் அல்ல. இது ஒரு சமூகக் கருத்துடன் கூடிய கலைச் சிந்தனையை கொண்டுள்ள படைப்பு. இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இப்படம் ஆஸ்திரேலியாவில் உருவாகி இருக்கும் தமிழ்ப் படம் என்பது தான். இந்தக் கதைக்கான நடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் அனைத்தும் பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் ஒத்துழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான விருதினைப் பெற்ற செல்வின் தாஸ் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாயகத்தில் தனது கல்வியையும், பாரம்பரியக் கலை விருப்பத்தையும் வளர்த்து, பின் ஆஸ்திரேலியாவில் குடியேறி, தமிழ் கலையை உலகம் முழுவதும் பார்வையிடச் செய்யும் ஒரு படைப்பாளியாக தற்பொழுது வளர்ந்துள்ளார்.இந்தப் படத்தை இயக்கியவர் தென்னிந்தியாவின் கவாஸ்கர் காளியப்பன். இவர் தமிழ் சினிமாவின் கதைக்கள நுணுக்கம் மற்றும் பாரம்பரிய கலைத்திறனில் தனிச்சிறப்பு பெற்றவர். இந்த திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது. விறுவிறுப்பான CG மாற்றங்கள், இசை ஒலி பதிப்புகள் ஆகிய அனைத்தும் நிறைவடைந்ததுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.