இலங்கை
அநுரவின் ஆட்சியிலும் மக்களுக்கு ஏமாற்றமே;

அநுரவின் ஆட்சியிலும் மக்களுக்கு ஏமாற்றமே;
மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்காவுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னைய ஆட்சியாளர்களின் அடக்குமுறை, பாரபட்சம் போன்ற செயற்பாடுகளைத் தகர்த்தெறிவார் என்று தமிழர்கள் நம்பினார்கள். அதனால்தான் அவர்கள் பெருவாரியான வாக்குகளை அவருக்கு வழங்கினார்கள். ஆனால், தற்போது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளையே அநுர அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது.
தமிழர்களை இலக்குவைத்து நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத – அவர்களால் நிராகரிக்கப்பட்ட உள்நாட்டு பொறிமுறையை வலியுறுத்துவதை விடுத்து, பொறுப்புக்கூறல் திட்டத்தை புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை நிரூபிப்பதனூடாக அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும் – என்றுள்ளது.