இலங்கை
அடிப்படைவாத நபர்களின் அரசியலுக்குள் தையிட்டி! அனுமதிக்கப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்ட அறிவிப்பு…

அடிப்படைவாத நபர்களின் அரசியலுக்குள் தையிட்டி! அனுமதிக்கப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்ட அறிவிப்பு…
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை, சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் நளிந்த மேலும் தெரிவித்ததாவது:-
தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகள் தொடர்பிலும், அதை மையப்படுத்திய பிரச்சினைகள் தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். திஸ்ஸ விகாரையிலுள்ள தேரர்கள் மற்றும் கிராம மக்களுக்கு இந்த விடயத்தில் பிரச்சினைகள் இல்லை. ஆனால், சில அடிப்படைவாதக் குழுக்களே அனைத்தையும் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றைத் தூண்டிவிட்டு மக்களைக் குழப்புவது அந்தக் குழுக்களின் நோக்கமாக உள்ளது. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் எப்பாகத்தில் இருந்தாலும் ஆன்மீகத் தளங்கள் மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை நாம் பாதுகாப்போம். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, வழிபடுவதற்குரிய சுதந்திரம் உள்ளது. அதனை நாம் பாதுகாப்போம். இந்தப் பிரச்சினையை வைத்து அடிப்படைவாத குழுவுக்கு அரசியல் இலாபம் தேடுவதற்கு இடமளிக்கமாட்டோம்- என்றார்.