இந்தியா
அட்டவணை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும்: புதுச்சேரியில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அட்டவணை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும்: புதுச்சேரியில் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் பூர்வ குடிகளாக இருக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவனை பழங்குடியினர் (Scheduled Tribe) பட்டியலில் உடனடியாக சேர்க்க வலியுறுத்தி தலப்பாகாட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை புதுச்சேரி அண்ணா சிலை அருகில், நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கே.ராம்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-புதுச்சேரி மாநிலத்தில் பூர்வகுடிகளாக வசித்து வரும் பழங்குடியின மக்கள் – மலக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகியோர் தற்போது எந்தவிதமான அரசு அங்கீகாரமும் இல்லாமல் மறைக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். 44 ஆண்டுகளுக்கு மேலாக, புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய அரசிடம் இந்த இனங்களை அட்டவணை பழங்குடியினராக (Scheduled Tribe) அங்கீகரிக்க கோரி பேரணிகள், மாநாடுகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.ஒவ்வொரு முறையும் கோரிக்கைகளுக்கான கோப்புகள் புதுச்சேரியிலிருந்து டெல்லிக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் மீண்டும் டெல்லியிலிருந்து புதுச்சேரிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை எங்களின் நியாயமான கோரிக்கைகள் எந்தவிதமான தீர்வும் பெறாமல் புறக்கணிக்கப்படுகின்றன. தென்னிந்தியா முழுவதிலும் இந்த நான்கு இன பழங்குடியின மக்கள் அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் தான் இருக்கிறார்கள். எனவே, மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு இரண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் 342/2-ன் படி புதுச்சேரியில் வசிக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை அட்டவணை பழங்குடியினர் (Scheduled Tribe) என்று அங்கீகரிக்க வேண்டும்.இந்த உறுதியான கோரிக்கையை வலியுறுத்தவே, அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த தலாப்பாகட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். கல்வி ஒன்று மட்டுமே உன்னை அனைத்து அடிமை தளத்திலிருந்து விடுவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.