இலங்கை
இசைப்பிரியா , பாலச்சந்திரன் படுகொலைக்கு நீதி கோரும் தென்னிலங்கை சட்டத்தரணி

இசைப்பிரியா , பாலச்சந்திரன் படுகொலைக்கு நீதி கோரும் தென்னிலங்கை சட்டத்தரணி
இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோருக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க ரனாஞ்சக கஹந்தகம குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் என கூறியே அனைத்து அரசாங்கங்களும் பதவிக்கு வருகின்றன.
பதவிக்கு வந்ததும் அதனை அடியோடு மறந்து விடுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சாட்சியங்கள் இல்லை என கூறப்படுகிறது.
இது மறுக்கப்படவேண்டிய ஒன்று. இலங்கை இராணுவத்திடம் தஞ்சமடைந்த இசைப்பிரியா மற்றும் சோபா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அதற்கு தகுந்த ஆதாரங்களும் சாட்சியங்களும் காணப்படுகின்றன.
இருப்பினும் இவர்களது குடும்பத்தார் சாட்சியமளிக்க முன்வராமல் உள்ளனர். மேலும் அவர்களது குடும்பத்தில் உள்ள எவரும் உயிருடன் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் பாலச்சந்திரனை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் இளையமகனாவார்.அவரும் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
இந்த அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வடக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.