வணிகம்
இஸ்ரேல் – ஈரான் மோதல்; கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: இந்தியாவை எப்படி பாதிக்கும்?

இஸ்ரேல் – ஈரான் மோதல்; கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் ஏற்றுமதிக்கு பரவலான இடையூறு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் விலை 7% க்கும் மேல் உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.எண்ணெய் விலை உயர்வு விவரம்:பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 4.87 டாலர் அல்லது 7.02% அதிகரித்து, 74.23 டாலராக முடிவடைந்தன. முன்னதாக இது 13% க்கும் மேல் உயர்ந்து, ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பிறகு இல்லாத அளவிற்கு 78.50 டாலர் என்ற தினசரி உச்சத்தை எட்டியது. இந்த வாரம், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 12.5% உயர்ந்தது.அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 4.94 டாலர் அல்லது 7.26% அதிகரித்து, 72.98 டாலராக முடிவடைந்தது. வர்த்தக அமர்வின் போது, WTI எண்ணெய் 14% க்கும் மேல் உயர்ந்து 77.62 டாலரை எட்டியது. இது ஜனவரி 21 ஆம் தேதிக்குப் பிறகு இல்லாத உச்சம் ஆகும். ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த அளவை விட WTI 13% உயர்ந்தது.இந்த இரண்டு அளவுகோல்களும் 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவற்றின் மிகப்பெரிய ஒருநாள் நகர்வுகளை பதிவு செய்துள்ளன. 2022 இல் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு எரிசக்தி விலைகளில் பெரும் உயர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.ஈரானின் அணுசக்தி தளங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் போன்றவற்றை தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. டெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுக்கும் நோக்கில் இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையின் ஆரம்பம் என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டது. சந்தைகள் முடிந்த சில நிமிடங்களிலேயே, ஈரானிய ஏவுகணைகள் டெல் அவிவ்வில் கட்டடங்களைத் தாக்கின. தெற்கு இஸ்ரேலிலும் குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன.எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள் அப்படியே இருப்பதாகவும், முழுமையாக செயல்படுவதாகவும், ஈரானின் தேசிய ஈரானிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினரான ஈரான், ஒரு நாளைக்கு சுமார் 3.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. மேலும், ஒரு நாளைக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றுமதி செய்கிறது.மோதல் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரு முக்கிய மையமாக இருக்கும் ஹோர்முஸ்-க்கு இடையூறுகள் ஏற்படுமோ என்ற கவலைகளும் அதிகரித்துள்ளன. இதன் வழியாக, உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கணிசமான அளவு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், பெட்ரோல், டீசல் விலை, பணவீக்கம், ரூபாயின் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றில் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது.