இலங்கை
ஒற்றுமைக்கான கதவு திறந்தே இருக்கின்றது; செல்வம் எம்.பி. தெரிவிப்பு!

ஒற்றுமைக்கான கதவு திறந்தே இருக்கின்றது; செல்வம் எம்.பி. தெரிவிப்பு!
தமிழ்மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களைத் தாமே ஆளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேசி ஓர் இணக்கப்பாடு ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி வருகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பாக உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இந்த அடிப்படையிலேயே நாம் தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஒப்பந்தத்துடன் செயற்படும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். தமிழரசுக் கட்சியுடனும் தொடர்ந்து பேசி வருகின்றோம். ஒற்றுமைக்காக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் கதவுகள் எப்போதும் திறந்துள்ளன.
தமிழ்மக்கள் மிகவும் நிதானமாகவிருக்கிறார்கள். தமிழ்த்தேசியக் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமையுங்கள் என்ற செய்தியைத் தமிழ் மக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலின் மூலம் கூறியுள்ளனர். அதை உணர்ந்து கொண்டவர்கள் தமிழர் தேசத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கவேண்டும்- என்றார்.