இந்தியா
கடல் சீற்றம் எதிரொலி: மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல் சீற்றம் எதிரொலி: மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் (ஜூன் 14) முடிவடைந்தது. வழக்கமாக இந்த தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மீனவர்கள் தங்கள் படகுகளை பழுதுபார்த்து கடலுக்கு செல்லத் தயாராக இருந்தனர்.ஆனால், வானிலை ஆய்வு மையம் ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை கடல் சீற்றத்துடன் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து மீனவர்கள் கூறுகையில், “ஆண்டுக்கு 6 முதல் 7 மாதங்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவதால், எங்களால் ஐந்து மாதங்கள் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கடல் சீற்றம் அல்லது சூறாவளி காற்று காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவிக்கும் நாட்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.