
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 14/06/2025 | Edited on 14/06/2025

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அதன் மூலம் அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். 2023ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ரூ.1000 கோடி கிளப்பில் முதல் தமிழ் இயக்குநராக அட்லீ இணைந்தார்.
இப்போது அல்லு அர்ஜூனை வைத்து இன்னும் பெயரிடாதப் படத்தை இயக்கிவருகிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதாக சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் முன்பு அறிவித்தது. அதன்படி இன்று அப்பபல்கலைக்கழத்தில் நடைபெற்ற 34வது பட்டமளிப்பு விழாவில் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அட்லீக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அட்லீ, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் தான் காட்சி தொடர்பியல் மாணவராகத் தனது பட்டப்படிப்பு முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.