உலகம்
மனிதாபிமானப் பொருள்களுடன் சென்ற மட்லீன் கப்பலைக் கைப்பற்றி பயணத்தைத் தடுத்தது இஸ்ரேல்!

மனிதாபிமானப் பொருள்களுடன் சென்ற மட்லீன் கப்பலைக் கைப்பற்றி பயணத்தைத் தடுத்தது இஸ்ரேல்!
காஸாவை நோக்கி மனிதாபிமானப் பொருள்களுடன் சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் பயணித்துக்கொண்டிருந்த மட்லீன் கப்பலுக்குள் இஸ்ரேலிய படையினர் பலவந்தமாக நுழைந்து அந்தக் கப்பலை இஸ்ரேல் நோக்கிக் கொண்டுசெல்கின்றனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு இதை உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலைப் பாதுகாப்பாக இஸ்ரேலுக்குக் கொண்டுசெல்கின்றோம். அதில் உள்ளவர்கள் அவர்களின் நாட்டுக்குப்பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸாவில் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். உணவின்றி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காஸாவுக்கான மனிதாபிமானப் பொருள்களுடன் கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். இந்தப் பயணத்தை ஆரம்பிக்கும் போது, இதற்கு முன்னர் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட கப்பல்கள் எதிர் கொண்ட ஆபத்துகளை வன்முறைகளை தாக்குதல்களை நாங்கள் அறிவோம். நாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் எவையையும் காஸாவில் உயிர்பிழைத்து வாழ்வதற்காக பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுடன் ஒப்பிடவே முடியாது. எங்களுடைய நோக்கம் காஸாவுக்குச் சென்று எங்களிடம் உள்ள மனிதாபிமானப் பொருள்களை ஒப்படைப்பதே என்று தெரிவித்திருந்தார்.