
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 13/06/2025 | Edited on 13/06/2025

தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் புதிதாக நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் முன்னதாக வெளியான நிலையில் ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் ஆக்ஷன், எமோஷன் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிந்தது.
ட்ரைலரின் இறுதியில் விஜயகாந்த் முகம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரின் பிரபல பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்…’ பாடல் பின்னணியில் ஒலித்திருந்தது. இதனால் இப்படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. பின்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து புரொமோஷன் பணிகளிலும் சண்முக பாண்டியன் ஈடுபட்டிருந்தார். இப்படம் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக இன்று(13.06.205) வெளியாகியுள்ளது.
படத்தின் திரைபிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. இதில் சரத்குமார், ராதாரவி, ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்தபடத்தை விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பல திரையரங்குகளில் பேனர்கள், கட்டவுட்டுகள், பட்டாசு, மேளதாளம் என கொண்டாடினர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தே.மு.தி.க-வினர் மொட்டை அடித்துக் கொண்டு படம் பார்த்தனர். இதையடுத்து சண்முக பாண்டியன் மற்றும் அவரது அண்ணன் விஜய பிரபகரன் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சண்முக பாண்டியன் ரசிகர்களின் அன்பால் கண்கலங்கியபடி எமோஷ்னலாக காணப்பட்டார்.