Connect with us

இந்தியா

புனித யாத்திரை சென்ற போது நிகழ்ந்த துயரம்; கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

Published

on

Chopper crash

Loading

புனித யாத்திரை சென்ற போது நிகழ்ந்த துயரம்; கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் உள்ள சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதார்நாத்திற்கு புனித யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக் அருகேயுள்ள கவுரிகுண்டில் இன்று (ஜூன் 15) அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் மே மாதத்தில், டேராடூனில் இருந்து கங்கோத்ரி தாம் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாசியின் கங்நானி அருகே விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து உத்தரகாண்டில் நிகழ்ந்திருப்பது பக்தர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து சட்ட ஒழுங்கு ஐ.ஜி. நிளேஷ் பர்னே கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில், கேதார்நாத்திலிருந்து குப்த்காசிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென காணாமல் போனது. பின்னர் அது கவுரிகுண்டில் விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என தெரிவித்தார்.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், கவுரிகுண்டில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில்,  கௌரி மாய் கார்க் என்ற இடத்தில் விழுந்துள்ளது.ஜெய்ப்பூரைச் சேர்ந்த விமானி கேப்டன் ராஜ்பீர் சிங் சவுகான், உத்தரகாண்டின் உகிமத்தைச் சேர்ந்த விக்ரம் ராவத், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வினோத் தேவி மற்றும் த்ரிஷ்டி சிங், குஜராத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சுரேஷ் ஜெய்ஸ்வால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரத்தா ராஜ்குமார் ஜெய்ஸ்வால் மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.உத்தரகாண்ட் சிவில் ஏவியேஷன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (UCADA) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரியன் ஏவியேஷனுக்குச் சொந்தமான BELL 407 பயன்பாட்டு ஹெலிகாப்டர், கவுரிகுண்ட் அருகே அறியப்படாத காரணங்களால் விபத்துக்குள்ளானது. ஆரம்ப தகவல்களின்படி, ஹெலிகாப்டரில் விமானி உட்பட மொத்தம் ஏழு பேர் இருந்தனர். பயணிகள் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, NDRF மற்றும் SDRF குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.UCADA தலைமை நிர்வாக அதிகாரி சோனிகா கூறுகையில், விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளோம் என்றார். இதற்கிடையே, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அதிகாரி ராகுல் சௌபே, மோசமான வானிலை காரணமாகவே விமானி ஹெலிகாப்டரை பள்ளத்தாக்கிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், அதுவே விபத்துக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்தார்.இந்தச் சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பக்கத்தில், “SDRF, உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற மீட்புப் படையினர் ஆகியோர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காக பாபா கேதாரை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.மாநிலத்தில் சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்துகளை அடுத்து, உத்தரகாண்டில் ஹெலி-சேவைகளின் செயல்பாட்டிற்கான நிலையான இயக்க நடைமுறையை (SOP) உருவாக்க தாமி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் துல்லியமான வானிலை மதிப்பீடுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.”ஹெலிகாப்டர் செயல்பாடுகளின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் ஆழமாக ஆய்வு செய்து, SOP-ஐ உருவாக்குவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஹெலி-சேவைகள் பாதுகாப்பான, வெளிப்படையான முறையில் மற்றும் நிறுவப்பட்ட தரநிலைகளுக்கு கண்டிப்பாக இணங்குவதை உறுதி செய்யும். மேலும், முந்தைய ஹெலிகாப்டர் விபத்துகளை விசாரிக்க அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழு, இன்றைய விபத்தையும் விரிவாக விசாரிக்கும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த குழு, ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னரான காரணங்களை ஆராய்ந்து, பொறுப்பற்ற தனிநபர்கள் அல்லது ஏஜென்சிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்” என்று முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 8 அன்று, கங்கோத்ரிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பயணிகளும் ஒரு விமானியும் உயிரிழந்தனர். ஜூன் 7 அன்று கேதார்நாத் நோக்கி ஐந்து பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று, டேக்-ஆஃப் செய்யும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தரகாண்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன