பொழுதுபோக்கு
3 மணி நேரம் 1 நிமிடம்: படத்திற்கு யு/ஏ சான்றிதழ்; தனுஷ் படத்தை கைப்பற்றிய துல்கர் சல்மான்!

3 மணி நேரம் 1 நிமிடம்: படத்திற்கு யு/ஏ சான்றிதழ்; தனுஷ் படத்தை கைப்பற்றிய துல்கர் சல்மான்!
சேகர் கம்முலாவின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படமான ‘குபேரா’, இறுதியாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) இருந்து “யு/ஏ” சான்றிதழைப் பெற்றுள்ளது. முன்னதாக 195 நிமிடங்கள் ஓடும் படமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், இறுதியாக 181 நிமிடங்களுக்கு, அதாவது மூன்று மணி நேரம் ஒரு நிமிடமாக சுருக்கப்பட்டுள்ளது.படக்குழுவினர் ஆரம்பத்தில் ஒரு நீண்ட பதிப்பைச் சமர்ப்பித்தனர். இதுவும் அனுமதிக்கப்பட்ட போதிலும், “கடைசி நிமிட பரபரப்பைத் தவிர்க்க” முன்கூட்டியே சான்றிதழ் பெறப்பட்டதாகவும், இறுதிப் பதிப்பை மேலும் சுருக்க திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அவர்களின் கூற்றுப்படி, இறுதி ஓட்ட நேரம் மூன்று மணி நேரம் ஒரு நிமிடமாகக் குறைக்கப்பட்டுள்ளது.’குபேரா’வில் தனது பயணம் குறித்து நடிகர் தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார். “நான் வெயிலில் நிற்க வேண்டியிருந்தது, நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது என்றெல்லாம் கூறுவது பொய். நான் எனது இயக்குநரை மட்டும் பின்பற்றினால் போதும். சேகர் சார் மிகவும் அருமையாக இருந்தார். அவர் எனக்கு நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். அவர் எனது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கினார். நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமானது, நான் சவாலை ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் தனது பட அனுபவம் குறித்து பேசிய தனுஷ், “இந்த படப்பிடிப்பு ஒரு அற்புதமான அனுபவம். நாங்கள் குப்பைக் கிடங்குகளிலும், குப்பைக் கண்டெய்னர்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கும்” என்று பகிர்ந்துள்ளார். ‘குபேரா’ ஒரு “மிகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த படம்” என்றும், தனது இதயத்திற்கு நெருக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும், நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள ‘குபேரா’, தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணையும் முதல் படமாகும். ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோட்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர், சைதன்யா பிங்காலி திரைக்கதையை இணைந்து எழுதியுள்ளார். காவ்யா ஸ்ரீராம் மற்றும் பூர்வா ஜெயின் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஸ்டைலிங் செய்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி பதாகையின் கீழ் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.இதற்கிடையில், அஹமதாபாத் அருகே நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தின் விளைவாக, தனுஷ் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 அன்று நடைபெறவிருந்த இந்த நிகழ்வு, விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக ரத்து செய்யப்பட்டது. பான் இந்தியா படமாக வெளியாகும் குபேரா படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை, நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை கேரளாவில் பிரம்மாண்டமாக வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.