
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/06/2025 | Edited on 16/06/2025
15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழ்நிலையில், ஈரானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 78 உயிரிழந்தனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் குறிவைத்து நடத்திய தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியானது.மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் கூறியிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை ஈரான் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, ‘அமெரிக்க சொத்துக்கள் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது. ஈரானால் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் நாங்கள் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும். ஈரான் மீதான இஸ்ரேலின் இரவு நேர தாக்குதல்களில் அமெரிக்காவிற்கு எந்த பங்கும் இல்லை. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்ததை எளிதாகச் செய்து இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நிறுத்தி வைத்தது போல், ஒப்பந்தம் மூலம் ஈரான் – இஸ்ரேல் இடையிலான போரை நிறுத்துவேன். விரைவாக ஒரு முடிவை எடுத்து இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வருவேன்’ எனத் தெரிவித்தார்.
- “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
- “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்