இலங்கை
செவ்வந்திக்கு பணம் அனுப்பியவருக்கு விளக்கமறியல்

செவ்வந்திக்கு பணம் அனுப்பியவருக்கு விளக்கமறியல்
கொழும்பு நீதிம்ன்றில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 50,000 பரிமாற்றம் செய்த கண்டியைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகத் அபேசிங்க என்ற சந்தேக நபரையே 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர் இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாகக் கூறினர்.
கொலைக்கு முந்தைய நாள் பரிவர்த்தனை நடந்ததாகவும், பணம் சந்தேகநபரின் கணக்கில் ஒன்லைனில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சந்தேகநபர் இந்தப் பணத்தை ஏதேனும் குற்றக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்து பெற்றாரா என்பதைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 17வது சந்தேகநபராக அபி சின்ஹா என்ற நபர் பெயரிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர் கூறினார். விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சந்தேக நபர் சார்பாக வழக்கறிஞர் கீத் கருணாரத்ன ஆஜராகி, தனது கட்சிக்காரருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியாது என்று கூறினார்.
இந்நிலையில் இரு தரப்பினரின் உண்மைகளையும் பரிசீலித்த பிரதான நீதவான், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், சந்தேக நபரை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.