இலங்கை
தனியார் பல்கலைகளின் பட்டங்கள் ஆய்வுப் பணிகள் ஆரம்பம்! கல்வி அமைச்சர் தெரிவிப்பு

தனியார் பல்கலைகளின் பட்டங்கள் ஆய்வுப் பணிகள் ஆரம்பம்! கல்வி அமைச்சர் தெரிவிப்பு
தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்றுமுன்தினம் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து கல்வி அமைச்சு முறையான ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளன. சமீபத்திய ஆசிரியர் நியமனங்கள் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டன. எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத் தன்மை தற்போது கல்வி அமைச்சின் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்தத் தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் – என்றார்