இலங்கை
கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டிவைத்து கொடூர தாக்குதல்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டிவைத்து கொடூர தாக்குதல்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்த கொடூரமாக தாப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் ஒரு பெண், தனது கணவர் வாங்கிய ரூ. 80,000 கடனுக்காக, மரத்தில் கட்டிவைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூலி தொழிலாளியான ஸ்ரீஷாவின் கணவர் திம்மராயப்பா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முனிகண்ணப்பா என்பவரிடம் 80,000 கடனை வாங்கியிருக்கிறார்.
கடன் முழுமையாக திருப்பி செலுத்தப்படாத நிலையில், ஸ்ரீஷாவை, முனிகண்ணப்பாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, குழந்தைகள் கண்முன்னே வேப்ப மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.
இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு தொண்டரும் அவரது குடும்பத்தினரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக செயல்பட்ட குப்பம் நகரப் போலீசார், ஸ்ரீஷாவை மீட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, முனிகண்ணப்பா உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த சம்பவத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, “முதலமைச்சரின் சொந்த தொகுதியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இது ஆதாரம்” என்று கடும் விமர்சனம் செய்துள்ளார்.