இலங்கை
மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி

மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும் முயற்சி
முல்லைத்தீவு – சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் இன்று (17) அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய காணிகளை கடற்படையினர் அபகரித்துள்ளதுடன், குறித்த காணிகளில் அத்துமீறி முகாம் அமைத்துத் தங்கியுள்ளனர்.
நான்குபேருக்குரிய, இரண்டு ஏக்கர் காணிகளையே கடற்படையினர் இவ்வாறு அபகரித்து அத்துமீறித் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (17) குறித்த காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக கடற்படையினருக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே அப்பகுதி மக்களுடைய எதிர்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், அப்பகுதி கிராம பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.