விளையாட்டு
ஏக்க சக்க அனுபவம்… கோப்பை கனவை நனவாக்கிய கில்லாடிகள்: வியக்க வைக்கும் தமிழ் தலைவாஸின் புதிய பயிற்சியாளர்கள் பின்னணி!

ஏக்க சக்க அனுபவம்… கோப்பை கனவை நனவாக்கிய கில்லாடிகள்: வியக்க வைக்கும் தமிழ் தலைவாஸின் புதிய பயிற்சியாளர்கள் பின்னணி!
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று கபடி. ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடங்கப்பட்ட போது, தமிழகத்தை பிரதிநிதித்துவம் செய்ய ஒரு அணி கூட இல்லையே என்கிற ஏக்கம் ஒவ்வொரு கபடி ரசிகரையும் தொற்றிக் கொண்டது. இத்தொடர் தொடங்கி, 4 சீசன் கடந்த சூழலில், 5-வது சீசனில் அடியெடுத்து வைத்தது சென்னையை தலைமையிடமாக ‘தமிழ் தலைவாஸ்’.இப்போது தமிழக ரசிகர்கள் தங்களின் ஆதரவை தெரிவிக்க ஒரு அணி கிடைத்து விட்டது என மெச்சிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் உச்சி குளிரும்படி அந்த அணி இன்னும் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை. இதுவரை 7 சீசன்களில் ஆடி ஒரே ஒருமுறை மட்டும் தான் பிளே ஆஃப்க்கு முன்னேறி இருக்கிறது. 2022 இல் சிறப்பாக ஆடிய அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை நழுவ விட்டது.இந்த ஆண்டு 12-வது சீசன் தொடங்கும் நிலையில், ‘தமிழ் தலைவாஸ்’ அணி இந்த முறையாவது கோப்பையை முத்தமிடுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்களின் ஆவலை புரிந்து கொண்ட அணி நிர்வாகமும் புதிய மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சீசனில் இருந்த இரண்டு பயிற்சியாளர்களையும் அதிரடியாக நீக்கியுள்ளது. தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். உதவிப் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் அணியில் இணைந்துள்ளார்.யார் இவர்கள்? தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சஞ்சீவ் பாலியன் பற்றி கபடி ரசிகர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. பி.கே.எல் தொடரில் வலம் வரும் டாப் பயிற்சியாளர்களில் இவரும் ஒருவர். சாம்பியன்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற இவர், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவியிருக்கிறார்.பி.கே.எல் சீசன் 3-ல் பாட்னா பைரேட்ஸ் அணி முதல் முறையாக கோப்பை வென்ற போது, அந்த அணிக்காக பயிற்சி அளித்திருந்தார் சஞ்சீவ் பாலியன். இதன்பிறகு, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் கைகோர்த்த அவர், அந்த அணி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2022-ல் மீண்டும் கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றி இருந்தார். ஜூனியர் இந்திய கபடி அணியின் தேர்வாளராகவும் பணியாற்றிய சஞ்சீவ் பாலியன், கபடியில் தந்திரோபாய மேதையாகக் அறியப்படுகிறார். அவரது கபடி மூளை எதிரணிகளை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது. திட்டங்கள் தீட்டுவதிலும், அதனை களத்தில் வீரர்கள் வழியாக செயல்படுத்துவதிலும் அவர் கில்லாடி. பி.கே.எல் தொடரில் தங்களை அசைக்க முடியாத அணி என கொக்கரித்த அணிகளை தனது வீரர்களைக் கொண்டு அசைத்துப் பார்த்த அசாத்திய வீரன். மொத்தமாக சொல்வதென்றால் பலமும், மூளையும் கொண்ட சாம்பியன் பயிற்சியாளர்.இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பயிற்சியாளரான சுரேஷ் குமார், முன்னாள் புரோ கபடி லீக் வீரர் ஆவார். தமிழ்நாட்டின் ஜாம்பவான் கபடி வீரராக பார்க்கப்படும் அவர், புரோ கபடியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி மற்றும் யு மும்பா உள்ளிட்ட அணிகளுக்காக (சீசன் 2 முதல் 5 வரை) ஆடிய அனுபவம் கொண்டவர். அவர் பயிற்சியாளராக மாறிய பிறகு, தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியனுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் உதவி பயிற்சியாளராக முக்கிய பங்கு வகித்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு சீசன்களில் ஜெய்ப்பூரை வலுவான அணியாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்கள். இந்திய ரயில்வே அணிக்காக தாங்கள் விளையாடிய நாட்கள் முதல் தற்போது வரை இருவரும் மிகவும் இணக்கமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். சாதாரண வீரர்களை சாம்பியன் வீரர்கள் ஆக்குவதிலும், கோப்பை வெல்லாத அணிகள் அதனை முத்தமிடுவதிலும் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்களின் கூட்டணி இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியை சாம்பியன்களாக மாற்றும் என்கிற பெரும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.