இந்தியா
புதுச்சேரி செவிலியருக்கு இங்கிலாந்து மன்னரின் உயரிய விருது; நேரில் பாராட்டி கௌரவித்த ரங்கசாமி

புதுச்சேரி செவிலியருக்கு இங்கிலாந்து மன்னரின் உயரிய விருது; நேரில் பாராட்டி கௌரவித்த ரங்கசாமி
மூன்றாம் சார்லஸ் மன்னர் வழங்கிய 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு பட்டங்களில், ‘பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர்’ (Member of the Most Excellent Order of the British Empire – MBE) விருதை புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட குமாரசாமி பெற்றுள்ளார்.பிரிட்டன் அரசின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றான இந்த MBE விருது, இந்தியாவின் பத்மஸ்ரீ விருதுக்கு இணையாகக் கருதப்படுகிறது. செவிலியத் துறைக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்புகள், சர்வதேச செவிலியர் சமூகத்திற்கு வழங்கிய ஆதரவு மற்றும் சேவைக்காக இந்த உயரிய விருது குமாரசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச கல்வி பெற்ற செவிலியராக இந்த விருதைப் பெறும் இரண்டாவது நபர் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விருது, ஒரு துறையில் சிறப்பாகப் பணியாற்றி, நீடித்த மற்றும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் இந்திய செவிலியர் சங்கத்தின் (BINA) நிறுவனர் மற்றும் தலைவராக குமாரசாமி உள்ளார். இந்த அமைப்பு, 2020 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (BAPIO) ஆதரவுடன் நிறுவப்பட்டது. BINA அமைப்பு, இந்திய செவிலியர்கள் பிரிட்டன் சுகாதார அமைப்பில் நன்கு ஒருங்கிணைவதற்கும், தொழில்முறை வளர்ச்சி மற்றும் பணியியல் இலக்குகளை அடைய உயர்தர நலன் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.விருது பெற்ற குமாரசாமி, புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியிலும், கலவை கல்லூரியில் படிப்பையும் முடித்துள்ளார். மதர் தெரேசா செவிலியர் கல்லூரியில் 1994 ஆம் ஆண்டு செவிலியர் பட்டம் பெற்று புதுச்சேரி அரசில் பணிபுரிந்தார். பின்னர், 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று செவிலியராக சிறப்பாகப் பணிபுரிந்து, தற்போது பர்மிங்காமில் துணை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.இந்நிலையில், புதுச்சேரி வந்த குமாரசாமி இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.