இந்தியா
மூடப்படும் தருவாயில் புதுச்சேரி உயர்நிலைப் பள்ளி: அரசே ஏற்று நடத்த அ.தி.மு.க கோரிக்கை

மூடப்படும் தருவாயில் புதுச்சேரி உயர்நிலைப் பள்ளி: அரசே ஏற்று நடத்த அ.தி.மு.க கோரிக்கை
புதுச்சேரி புஸ்சி வீதியில் இயங்கி வரும் ஜெயராணி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவதுபுதுச்சேரி புஸ்சி வீதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஜெயராணி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு நிதி உதவியுடன் இயங்கி வரும் இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உப்பளம் தொகுதி மக்கள் தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உப்பளம் தொகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் தலித் கிறிஸ்தவ வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.இந்நிலையில், அந்தப் பள்ளியை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூடுவதாக கல்வித்துறைக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து கொள்ளுமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் பள்ளியை வியாபார நோக்கத்திற்காக மூட பள்ளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசானது இந்த பள்ளியை மூட அனுமதிக்காமல் அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.