இலங்கை
ராஜபக்சக்களை விடவும் பிரபாகரன் மேலானவர்; சரத் பொன்சேகா காட்டம்!

ராஜபக்சக்களை விடவும் பிரபாகரன் மேலானவர்; சரத் பொன்சேகா காட்டம்!
போர் நடைபெற்றபோது பிரபாகரன் கூட எமது குடும்ப உறுப்பினர்களை இலக்குவைக்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் எமது குடும்ப உறுப்பினர்களைக் கூட விட்டுவைக்க வில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.
அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது:-
இராணுவத்தை வைத்து மஹிந்த ராஜபக்ச அன்று அரசியல் நடத்தினார். இன்று அவரது மகன் நாமல் ராஜபக்ச அதைச் செய்யமுற்படுகின்றார். ஜனாதிபதி இராணுவத்தினரைச் சிப்பாய் என்று கூறிவிட்டார் என்று கூறிச் சிலர் கொதித்தெழுந்துள்ளனர். இராணுவத்தினரைச் சிப்பாய் என்று விளிப்பதில் எந்தத் தவறும் கிடையாது.
போர் முடிந்த பின்னர் என்னை இரண்டரை வருடங்கள் சிறையில் அடைத்தனர். எனக்குக் கீழ் வேலைசெய்த 35 பேரை ஓய்வூதியம் இன்றி வீட்டுக்கு அனுப்பினார்கள். தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை கிடைப்பதையும் ராஜபக்சக்கள் தடுத்தனர். சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தது தவறு என நாமல் ராஜபக்ச இன்று கூறுகின்றார். ஆனால் அவரது தந்தை, சித்தப்பா போன்றவர்கள்தான் என்னைச் சிறையில் அடைத்தனர்.
புலிகளுடன் நாம் நேருக்கு நேர் போரிட்டோம். ஆனால் எமது குடும்பத்தார் மீது பிரபாகரன் தாக்குதல் நடத்தவில்லை. பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் அதையும் செய்தனர். எனது மகள்மார் வெளிநாட்டில் இருந்துவரும் போது விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எனது மருமகனை கைது செய்வதற்கு முற்பட்டனர். ஆனால் அதைச் செய்யமுடியாமற் போனது -என்றார்.