இலங்கை
கட்சி மாறி வாக்களித்த உறுப்பினருக்கு நேர்ந்த கதி

கட்சி மாறி வாக்களித்த உறுப்பினருக்கு நேர்ந்த கதி
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்கெடுப்பின்போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் மா. குமார் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.
இன்று (19) நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தேர்தலின்போது,
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட மா. குமார் என்ற பிரதேச சபை உறுப்பினருக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் நா. இரட்ணலிங்கம் அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், “இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தலைவர் தேர்தலின்போது, கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் எதிர்த்து வாக்களித்துள்ளீர்கள்.
ஆகவே, உடனடியாக அமுலுக்கு வருமாறு உங்கள் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் விளக்கம் இருப்பின், ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்கவும்.
இல்லையெனில், கட்சியிலிருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தேர்தலின்போது, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் சண்முகநாதன் ஜெயந்தனும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தர்மலிங்கம் சுப்பிரமணியம் நந்தகுமாரும் முன்மொழியப்பட்டனர்.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் உறுப்பினர் மா. குமார், தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரான சண்முகநாதன் ஜெயந்தனுக்கு வாக்களித்திருந்தார்.
பின்னர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் சென்று, தான் தவறுதலாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டதாகவும், தனது வாக்கை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றுமாறும் கோரினார்.
எனினும், வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனை மாற்ற முடியாது எனவும் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தெரிவித்தார்.
இதேவேளை, உப தவிசாளர் தேர்தலின் போது மா. குமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினருக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.