இலங்கை
முள்ளிவாய்க்கால் சூத்திரதாரிகளுடன் இணைந்து நரித்தனமான ஆட்சியே யாழில் இடம்பெறுகிறது

முள்ளிவாய்க்கால் சூத்திரதாரிகளுடன் இணைந்து நரித்தனமான ஆட்சியே யாழில் இடம்பெறுகிறது
அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்பினருடன் இணைந்து, அந்த அழிவுகளை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றோருடன் கூட்டுச் சேர்ந்து, நரித்தனமான ஆட்சியை சிலர் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்றனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மாறியுள்ளார். அதனால் தான் அவரின் தலைமைப் பதவிக்கு எதிராகக் கூட கட்சிக்குள் கோஷங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. தற்போது மட்டுமல்ல தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக சாணக்கியன் உள்ளிட்டவர்கள் போலிக் கருத்துகளைப் பரப்பி வந்தனர். அதன் மற்றுமொரு அங்கமே பிள்ளையானின் கட்சியுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட கதையாகும். தேசிய மக்கள் சக்தி பிள்ளையானின் கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. எந்தவொரு கட்சியுடனும் எமக்கு டீல் கிடையாது.
என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்சக்களுடன் கரம்கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குக் காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேர்ந்து வருகின்றனர். சித்து விளையாட்டுகள் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என சாணக்கியன் போன்றவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுவருகின்றனர். அதனால் தான் களவாணிகள் கூட்டுச் சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சியமைக்க முற்படுகின்றனர் – என்றார்.